சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Sunday, March 4, 2012

சீக்கியர்களின் தனிநாடு கோரிக்கை - காலிஸ்தான் தீவிரவாதம் - இறுதிப் பகுதி



தீவிரவாதிகளுடன் சீக்கியர் கட்சி தலைவர் லோங்கோவாலும் சேர்ந்து கொண்டார். "பஞ்சாப் மாநிலத்தில் விளையும் தானியங்களை ஜுன் 3ந்தேதிக்குப்பிறகு, வெளி மாநிலங்களுக்கு அனுப்பமாட்டோம்" என்று அறிவித்தார். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்ததால், பொற்கோவிலுக்கு ராணுவத்தை அனுப்ப இந்திரா காந்தி முடிவு செய்தார். பொற்கோவிலுக்குள் "ஹர்மந்திர் சாகிப்" என்ற இடம் மிக முக்கியமானது. அங்குதான், சீக்கியர்களின் புனித புத்தகம் (கிரந்தம்) 200 ஆண்டுகளுக்கு மேலாக படிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்துக்கு சேதம் ஏற்படக்கூடாது என்றும், மொத்தத்தில் பொற்கோவிலுக்கு அதிக சேதம் இல்லாதபடி தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்றும் ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது.

பொற்கோவிலுக்கு ராணுவம் அனுப்பப்படுவது, டெல்லியில் ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், பிந்தரன்வாலேயின் "ஒற்றர்படை" மிகத்திறமையாகச் செயல்பட்டு, அதைக் கண்டுபிடித்து விட்டது. "பொற்கோவிலுக்கு ராணுவம் வரப்போகிறதாம். வரட்டும், வரட்டும்! அவர்களை தூள் தூளாக்குகிறேன்" என்று கொக்கரித்தான் பிந்தரன்வாலே. 1984 ஜுன் 5ந்தேதி மாலை 4 மணி. பொற்கோவிலை ராணுவம் சுற்றி வளைத்துக்கொண்டது. இந்த ராணுவ டிவிஷனுக்கு தலைமை தாங்கியவர் மேஜர் ஜெனரல் குல்திப்சிங் பரார். இவர் ஒரு சீக்கியர். உள்ளே இருக்கும் தீவிரவாதிகள் அனைவரும் வெளியே வந்து சரண் அடையும்படி, ஒலிபெருக்கி மூலம் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. பொற்கோவிலில் வழிபடுவதற்காக வந்தவர்கள் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் 126 பேர் மட்டும் வெளியே வந்தனர்.

தீவிரவாதிகள் எவரும் வரவில்லை. சீக்கியர் கட்சி தலைவர் லோங்கோவாலும், அவருடைய ஆதரவாளர்களும் (தீவிரவாதி அல்லாதவர்கள்) பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்தனர். அவர்களை வெளியேற்ற ராணுவத்தின் கமாண்டோ படையினர், அன்றிரவு கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்களை நோக்கித் தீவிரவாதிகள் சுட்டதில், ஏறத்தாழ 40 கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். எனினும், லோங்கோவாலும், அவருடைய ஆதரவாளர்களும் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர். ஜுன் 6ந்தேதி காலை "ஆப்பரேஷன் புளூ ஸ்டார்" என்று வர்ணிக்கப்படும் "பொற்கோவில் போர்" தொடங்கியது. கோவிலுக்குள் நுழைந்த ராணுவத்தினரை நோக்கி, தீவிரவாதிகள் துப்பாக்கியாலும், பீரங்கியாலும் சுட்டனர். ஏவு கணைகளையும் வீசினர். முதல் கட்டத்திலேயே நூற்றுக்கு மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பெரிய சுவர்போல அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, தொடர்ந்து இயந்திரத்துப்பாக்கிகளால் தீவிரவாதிகள் சுட்டனர். இதனால் டாங்கிகளுடனும், கவச வண்டிகளுடனும் ராணுவத்தினர் பொற்கோவிலுக்குள் நுழைந்து தாக்கினர். இருதரப்புக்கும் இடையே பயங்கரப்போர் நடந்தது. டாங்கிப் படையினரின் சரமாரி தாக்குதலால், தீவிரவாதிகள் செத்து விழுந்தனர். சில மணி நேரம் நடந்த இந்த போரில், தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். உள்ளே சென்ற ராணுவத்தினர், பிந்தரன்வாலேயை தேடினர். அவன் மற்ற தீவிரவாதிகளுடன் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தப் போரில் 493 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் மொத்தத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறின.

பொற்கோவிலின் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. முக்கிய இடமான ஹர்மந்திர் சாகிப், அதற்கு அடுத்த முக்கிய இடமான அகல் தகத் ஆகிய இடங்களும் சேதம் அடைந்தன. அங்கு 300 இடங்களில் குண்டுகள் துளைத்து சென்ற அடையாளம் தெரிந்தது. சீக்கிய குருமார்கள் கையினால் எழுதி வைத்திருந்த புனித நூல்கள் எரிந்துபோயின. பொற்கோவிலைப் பார்வையிட்டு, அமைதி திரும்ப ஆவன செய்யுமாறு ஜனாதிபதி ஜெயில் சிங்கை இந்திரா காந்தி கேட்டுக்கொண்டார். அதன் பேரில் 9ந்தேதியன்று, பொற்கோவிலுக்கு ஜனாதிபதி சென்று பார்வையிட்டார். அப்போது எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து வந்த ஒரு துப்பாக்கிக்குண்டு, ஜனாதிபதியை உரசிக் கொண்டு சென்று, அருகில் நின்று கொண்டிருந்த பாதுகாவலரின் தோளில் பாய்ந்தது.

பொற்கோவில் வளாகம் மிகப்பெரியது. பல கோபுரங்களைக் கொண்டது. ராணுவத்தினரின் தாக்குதலுக்குத் தப்பி, ஏதோ ஒரு கோபுரத்தில் ஒளிந்திருந்த தீவிரவாதி, ஜனாதிபதியை நோக்கி சுட்டிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. பொற்கோவில் சேதம் அடைந்த நிகழ்ச்சிக்கு வருந்துவதாகவும், பொற்கோவிலை மத்திய அரசு விரைவில் புதுப்பிக்கும் என்றும் ஜனாதிபதி ஜெயில்சிங் தெரிவித்தார்.

பொற்கோவில் போருக்குப்பிறகு, தன் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று இந்திரா காந்தி எண்ணினார். இதுபற்றி ராஜீவ் காந்தியிடமும், சோனியாவிடமும் தெரிவித்தார். ராஜீவ் காந்தியின் மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோர் ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தனர். அவர்களை இனி ஹாஸ்டலுக்கு அனுப்பவேண்டாம் என்று கூறி, வீட்டிலிருந்தே பள்ளிக்கூடத்துக்கு போய் வரச்சொன்னார். வீட்டிலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே போகவேண்டாம் என்று கூறினார். இந்திரா காந்தியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று ராணுவ மந்திரி விரும்பினார். "உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை, போலீசாரிடம் இருந்து ராணுவத்துக்கு மாற்ற வேண்டும்" என்று அவர் இந்திராவிடம் யோசனை தெரிவித்தார். அதற்கு இந்திரா சம்மதிக்கவில்லை.

"நான் பிரதமராக இருப்பது ஒரு ஜனநாயக அரசுக்கு. ராணுவ அரசாங்கத்துக்கு அல்ல" என்று கூறிவிட்டார். அக்டோபர் மாதத்தில் இந்திரா காந்தி திடீரென்று காஷ்மீர் செல்ல விரும்பினார். "இப்போது காஷ்மீரில் சூழ்நிலை சரியில்லை. பிறகு வரலாமே" என்று கவர்னர் ஜக்மோகன் தெரிவித்தும் அதைக் கேட்காமல், பேரக்குழந்தைகள் ராகுல், பிரியங்கா ஆகியோரை அழைத்துக்கொண்டு காஷ்மீர் சென்றார்.

மலர்கள் நிறைந்த பகுதியில் நடந்து சென்றார். கவர்னர் தடுத்தும் கேளாமல், பேரக்குழந்தைகளுடன் மார்க்கெட்டுக்குச் சென்றார். குழந்தைகளுக்குப் பழங்கள் வாங்கிக் கொடுத்தார். காஷ்மீரில் 36 மணி நேரம் மட்டுமே தங்கியிருந்து விட்டு, டெல்லி திரும்பினார். இந்திராவை அவர் சிநேகிதி புபுல் ஜெயக்கர் சந்தித்தார். "புபுல்! மரணம் என்னை நெருங்குகிறது!" என்று இந்திரா கூறினார்.

"இப்போது மரணம் பற்றி அடிக்கடி பேசுகிறாயே, ஏன்?" என்று கேட்டார், புபுல். "நான் மரணத்தைப்பற்றி பயப்பட வில்லை. ஆனால், நான் கொலை செய்யப்படுவேன் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. இதுபற்றி ராஜீவிடம் கூறியிருக்கிறேன். என் அஸ்தியை, இமயமலைச் சாரலில் தூவும்படி சொல்லியிருக்கிறேன்" என்று இந்திரா கூறினார். புபுல் ஜெயக்கரின் கண்கள் கலங்கின. இந்திராவைக் கட்டித் தழுவிக்கொண்டு, "விபரீதம் எதுவும் நடக்காது" என்று கூறினார்.

ஆனால் அனைவரும் பயந்த சம்பவம் நடந்தே விட்டது, ஆம் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது பற்றி தனியாக படிக்க இந்திரா காந்தியின் கடைசி நாள் படிக்கவும்.

ஆரூர் மூனா செந்தில்

4 comments:

  1. வரலாற்றை கண்முன் வரவைத்த பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  2. வரலாற்றை பகிர்ந்த சுவாரஸ்யமான பதிவு!

    ReplyDelete
  3. ஆனந்த விகடன் வலையோசை பகுதியில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் செந்தில்,..

    ReplyDelete
  4. காலிஸ்தான் போராட்டம் பற்றி தகவல்கள் அருமை.
    தனி நாடு கோரிக்கையில் நியாயம் இருந்தாலும் போராட்டமுறை முற்றிலும் தவறு. ஊடகவியலாளர்களை கொள்வதும், இந்துக்களை கொள்வதும் ஒருகாலத்திலும் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...