சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, April 27, 2013

தொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள்

கடந்த வியாழன் அன்று வேலைக்கு செல்லும் நேரத்திற்கு வழக்கம் போல் கிளம்பிச் சென்றேன். நான் வேலைக்குச் சேர்ந்து முதல் தொழிற்சங்க தேர்தல் அல்லவா. அதனால் விவரம் சற்று குறைவாகவே தெரிந்திருந்தது.


லோகோ ஸ்டேசன் தாண்டியதும் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் வாசலில் ஒரு யூனியன் ஆளை மற்றொரு யூனியனை சேர்ந்தவர்கள் வெளுத்துக் கொண்டு இருந்தனர். ரத்தம் சொட்டச் சொட்ட அவர் எழுந்து ஓடினார். காவலுக்கு வந்தவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். லேசாக கலக்க ஆரம்பித்தது.

வழியெங்கும் காவல்துறையினரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் நிறைந்திருந்தனர். தொழிற்சாலை உள்ளே நுழையும் முன்னே ஒரு யூனியனைச் சேர்ந்தவர்கள் என்ன ஏது என்று கேட்காமல் அவர்கள் சின்னமிட்ட பூத் சிலிப் கொடுத்து விட்டு என் சட்டையில் அவர்கள் பேட்ஜை குத்தி விட்டு சென்றனர்.


தனியா இருந்தா வம்பு தான் வரும், நமக்கு பலமே நமது செக்சன் ஆட்கள் உடன் இருப்பது தான் என்று முடிவு செய்து எங்கும் நின்று வாக்களிக்கும் பகுதிகளை கவனிக்காமல் வண்டியை நேரே என் செக்சனுக்கு விட்டேன். உள்ளே ஒரு யூனியனின் சார்பாக பட்டுவாடா நடந்து கொண்டு இருந்தது.

என் அருகிலும் வந்தார்கள், உன்னைப் போன்ற அப்ரெண்டிஸ்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது எங்கள் யூனியன் தான் எங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று காதில் கிசுகிசுத்து விட்டு கவரை கையில் திணித்து சென்றார்கள். அன்றைய உ.பா செலவுக்கு பணம் கிடைத்ததால் என் செக்சன் மக்கள் குதூகூலத்துடன் இருந்தார்கள்.


உள்ளே நுழைந்து பார்த்தால் உள்ளே உ.பா ஆறாய் ஓடிக் கொண்டு இருந்தது. பிறகென்ன கும்பலுடன் கோயிந்தா தான். அந்த நாள் வரை வேலைக்கு செல்லும் ஒர்க்சீட்டை எழுதிக் கொடுக்கும் டேபிள் கச்சேரி மேளாவாகி இருந்தது.

வாக்குப்பதிவு நடக்கும் இடம் கூட்டத்தால் அல்லோகலப்பட்டுக் கொண்டு இருந்தது. கூட்டம் குறையும் வரை அங்கு செல்ல வேண்டாம் என்றும் நாங்கள் ஆதரிக்கும் யூனியனைத் தவிர மற்றவர்கள் பட்டுவாடா செய்வதால் போய்க்கேட்டால் சண்டை தான் வரும் என்றும் தாமதமாக செல்வது என்று முடிவு செய்து அதுவரை தாக சாந்தியில் இறங்கினோம்.

ஒரு யூனியன் பட்டுவாடா செய்தது அறிந்ததும் மற்றொரு யூனியனும் பட்டுவாடா செய்ய ஆரம்பித்தனர். அவர்களின் ரகசிய கோரிக்கை என்னவென்றால் நாங்கள் தான் மெஜாரிட்டியினர், எங்களை ஆதரித்தால் சில கோரிக்கைகளை குறிப்பிட்டு செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து சென்றனர்.


பட்டுவாடாவை மொத்தமாக சேகரித்து மீண்டும் உ.பா வாங்க நானும் கங்காவும் சென்றோம். அதற்குள் செக்சனுக்கு பிரியாணி, அசைவ சாப்பாடு வகையறாக்கள் வந்து சேர்ந்தது.

கச்சேரி களை கட்ட ஆரம்பித்தது. அதற்குள் ஜாதி வகுப்பை பிரதானப்படுத்தி இயங்கும் யூனியன் ஆட்கள் பட்டுவாடா விவரம் அறிந்ததும் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்களிடம் நாம் இந்த வகுப்பை சேர்ந்தவர்கள் நமது ஓட்டு நம்ம யூனியனுக்கு தான் வர வேண்டும்.

காசு வாங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கேட்டார்கள். ஏற்கனவே இவர்கள் மற்றொரு யூனியனிடம் 10 லட்சம் வாங்கிக் கொண்டு ஓட்டை பிரிப்பதாக வந்த செய்தியால் கடுப்பில் இருந்தார்கள் தொழிலாளிகள். முதல் அடி சாம்பார் பொட்டலத்தில் ஆரம்பித்தது. யூனியன் தலைவனுக்கு பின்னால் இருந்து என் செக்சன் ஆள் சாம்பார் பொட்டலத்தை வீசி எறிந்தான். பிறகென்ன அவர்கள் ஆள் அம்பு படையுடன் வந்து சேர மினிவார் ஆரம்பித்தது.

ஆர்பிஎப்கள் வந்து கூட்டத்தை விலக்கி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அன்று வரை பெரிய மனிதன் தோரணையில் வெள்ளை சட்டை அணிந்து பந்தாவாக வந்த தலைவன் சாம்பார் அபிஷேகம் பெற்று அசிங்கப் பட்டு போனார்.

இன்னும் எக்கச்சக்கமாக ஏத்திக் கொண்டு ஆட்டம், பாட்டம் கச்சேரி என நேரம் சென்று கொண்டிருந்தது. மற்ற செக்சன் ஆட்களை ஓட்டுப் போடும் படி பணித்துக் கொண்டு இருந்த யூனியன் ஆட்கள் எங்கள் செக்சன் பக்கமே வர பயந்து கொண்டு இருந்தனர்.

மதியம் பிரியாணி தின்று விட்டு ஆட்கள் அப்படியே நித்திரையில் சாய ஆரம்பித்தார்கள். நாலு மணிக்கு போதை தணிந்ததும் மொத்த கும்பலும் ஓட்டுப் போட சென்றோம். எல்லா யூனியன் ஆட்களும் முறைத்துக் கொண்டு இருந்தார்கள். செய்த கலாட்டா அப்படியாச்சே.

ஓட்டுப் போட்டு முடிந்ததும் பதவிசாக வெளியே வந்து கலைந்தோம். வெளியே வந்த பிறகு எங்களுக்கு வேண்டிய ஆட்களிடம் இருந்து தகவல் வந்தது. நாங்கள் செய்த கலாட்டாவினால் அந்த குறிப்பிட்ட யூனியன் ஆட்கள் எங்களை வம்பில் மாட்டி விட காத்திருக்கிறார்கள் என்று.

வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி நடக்கிறது. அன்று தான் கச்சேரி இருக்கிறது. எங்கள் செக்சனின் பெரும்பாலான ஆட்கள் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருக்கும் யூனியன் வெற்றி பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை அந்த யூனியன் தோற்றால் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.

நாங்கள் ஆதரித்த யூனியன் எது, வாக்குப்பதிவு விவரங்கள் போன்றவற்றை 2ம் தேதி தெரிவிக்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்


15 comments:

  1. என்னது சரக்கா?? நீங்களா?? நீங்க குடிக்கிறதை விட்டுட்டதா படிச்ச ஞாபகம் எனக்கு??? என்னவோ நடக்குது போங்க !!!

    ReplyDelete
    Replies
    1. ஒருநாள் நடந்த சம்பவத்துக்கு நாலு பதிவு போட்டா நாலு நாள் குடிச்ச மாதிரி தெரிய வந்துடுது. என்ன செய்ய.

      Delete
  2. மாப்ள இந்த "மொட்ட" எப்போ?

    ReplyDelete
    Replies
    1. மச்சி அது மொட்டையில்லை. டீப் சம்மர் கட்.

      Delete
  3. அனுபவ பகிர்வு! சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்

      Delete
  4. ஓட்டுக்கு காசு வாங்குறது தப்பு இல்லையா.... அரசியல் வாதி மட்டும் எல்லாரும் வை கிழிய பேசுறிங்க.... மொதல... நம்ம சுத்தமா இருக்கணும்னு எல்லாரும் நெனைகனும்

    ReplyDelete
    Replies
    1. ஒட்டு போட்டது ஒரு தொழிற்சங்கத்திற்கு. நான் வேலை பார்த்ததும் அந்த தொழிற்சங்கத்திற்கு தான். ஆனால் பணம் கொடுத்து வளைக்கப் பார்த்தது மற்றொரு தொழிற்சங்கம். கிடைத்த வரை லாபம் என்று தான் அன்று வாங்கி செலவு செய்தோம். அது மட்டுமில்லாமல் ஆண்டு சந்தாவாக 500 ரூபாய் கொடுக்கிறேன். அதில் பாதியைத்தான் திருப்பி வாங்க முடிந்தது.

      Delete
  5. படிச்சுட்டு நல்ல வேலைல உள்ளவங்களே இந்த மாதிரி உற்சாக பானத்துக்கும் பிரியாணிக்கும் உங்களோட உரிமையை விட்டு கொடுத்தா படிக்காத மக்களை என்னைக்கு திருந்த முடியும்..

    ReplyDelete
    Replies
    1. ஐயா பெரிய மனுசரே. காசுக்கு ஓட்டு போட்டதா நான் எங்கேயும் சொல்லவே இல்லை. வாங்கி செலவு செய்தோம் என்று தான் சொல்லியிருக்கேன். யாருக்கு ஓட்டுப் போடனும் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டது. நான் விருப்பமில்லாமல் கொடுத்த சந்தாவைத்தான் திருப்பி வாங்கினேன்.

      Delete
  6. Thanks for sharing. But I am just wondering how could the unions get that much money? And how will they benefit form this?

    - SP

    ReplyDelete
    Replies
    1. அது பெரிய கதைங்க. தொழிற்சங்கம் அங்கீகாரம் பெற்று விட்டால் கேண்டீன், குவார்ட்டர்ஸ், ஹாஸ்பிட்டல், மற்றும் அர்பன் வங்கி போன்றவையின் கமிட்டியை அந்த தொழிற்சங்கம் தான் நிர்வகிக்க வேண்டும். மருந்துப் பொருட்கள் சப்ளையில் கமிஷன், உணவகம் பொருள் வாங்குவதில் கமிஷன், குவார்ட்டர்ஸ் அலாட் செய்வதில் கமிஷன் இதையெல்லாம் விட முக்கியமாக பல்லாயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருக்கும் அர்பன் வங்கியை நிர்வகிக்கும் பொறுப்பு கிடைக்கிறது. யாருக்கு எவ்வளவு லோன் கொடுக்கலாம் அதற்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்பது வரை கோடிக்கணக்கில் பணம் பொரட்டலாமே. ஒரு தொழிற்சங்கத் தலைவர் ஆரம்பத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போர்ட்டராக இருந்தவர் இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். இது பத்தாதா.

      நியாயமாக தொழிலாளிகளின் பணத்தை லாபநோக்கமில்லாமல் எடுத்து தொழிலாளிகளுக்கு சேவை செய்ய வேண்டியது தான் தொழிற்சங்கத்தின் வேலை. இன்று அதன் நோக்கமே மாறிவிட்டது.

      Delete
    2. I understand. The purpose of the union has been changed completely. If we want better politicians then the change should start from here but it won't happen.

      Anyway, happy that you had some great time and fun during the elections and thanks for sharing those experiences.

      Wish you to become a leader in future :):).

      Delete
  7. You are always drinking alcohol or eating Non-Veg, I would like to know about your health when you hit 40 yrs.

    ReplyDelete
  8. ஆரூர் மூனா, பதிவை படித்துவிட்டு யாராவது தொழிற்சங்க ஆட்கள் கும்மிவிடப் போகிறார்கள்... ஜாக்கிரதை...

    அப்புறம், வாசகர்களுக்கு உங்கள் மீதுள்ள அக்கறை மெய் சிலிர்க்க வைக்கிறது...

    உங்க தலைவர் பாணியில் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் போட்டிருக்கீங்க போல... ஆனா ஐட்டம் தான் சரியில்லை... குருவிடம் பயிற்சி பெறவும்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...